#Breaking:ஹெலிகாப்டர் விபத்து;வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – தமிழக காவல்துறை எச்சரிக்கை !

#HelicopterCrash: Strict action against gossip - Tamil Nadu Police Warning!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள். விபத்துக்கான காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணை நடக்கிறது. விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி,பொய் தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறாக கருத்து பரப்பினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக,ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவு செய்த யூடியூபர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.