மாமல்லபுரம் கடற்கரையில் 20 லட்சம் செலவில் முதலமைச்சருக்கு 160 அடி மணல் சிற்பம்

160 feet sand sculpture for the Chief Minister at a cost of 20 lakhs on Mamallapuram beach

மாமல்லபுரம் கடற்கரையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் ஏற்பாட்டில் 50 டன் மணல் கொண்டு ரூபாய் 20 லட்சம் செலவில் 160 அடி நீளத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பத்தை கும்பகோணத்தை சேர்ந்த கவின் கல்லூரியின் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி,பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் ,

அதிமுக ஆட்சியின் சாதனைகளை நினைவு படுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.அதிமுக ஆட்சியில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார் அவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது.தற்போது ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்ற 12 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்த மணல் சிற்பம் பொதுமக்களின் பார்வைக்கு மூன்று நாட்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களாக கவின் கல்லூரியின் சிற்பக் கலைஞர்கள் 10 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்றுகொண்டு இரட்டை இலை சின்னத்தை காண்பிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வி.எஸ்.ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.