டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் ! அமித் ஷா நிபந்தனையை ஏற்க மறுப்பு

Home Minister Amit Shah has said he is ready to negotiate with the condition, but agricultural organizations have said they will ignore it.

நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக  விவசாய அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை  நடத்தினார்கள்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றனர்.ஆனால் டெல்லிக்குள் நுழையவிடாமல் போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் வந்ததால் ,போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பேரணியில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து குவிந்து வந்ததால்,டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் நான்காவது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்திர பிரதேச விவசாயிகளும் குவிந்து வருகின்றனர்.ஆகவே டெல்லியில் உள்ள பல முக்கிய சாலைகளில் டிராக்டர் மூலமாக ஏராளமான விவசாயிகள் வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக விவசாயிகள் போராட்டத்தை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்ற டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.ஆனால் விவசாய அமைப்புகள்  தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன.

போராட்டம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில்,இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ,டிசம்பர் 3-ஆம் தேதிக்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது.குறிப்பாக பேச்சுவார்த்தைக்கு முன்னர் விவசாய அமைப்புகள்  அரசு கூறும் இடத்திற்கு போராட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது அரசு.இதன்படி மாற்றிக்கொண்டால் பின்னர் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.இந்நிலையில் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக சுமார்  30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.