செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி51!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் உள்ள செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வசனம் இடம்பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று காலை 10:28 மணிக்கு பிஎஸ்எல்வி – சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் அமேசானியா-1 மிஷன் என்ற செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ, விண்ணுக்கு செலுத்தவுள்ளது. இந்த அமேசானியா, 637 கிலோ எடை கொண்டதாகும். அதன் ஆயுள் காலம் 4 ஆண்டுகள் என்றும், இந்த செயற்கைகோள் பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டதாகும்.
அதுமட்டுமின்றி, இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்களும், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்தநிலையில், இதில் இடம்பெற்றுள்ள 19 செயற்கோள்களில் ஒன்றான தீஷ் தவான் சேட் செயற்கைக் கோளில் பிரதமர் நரேந்திர மோடி படமும், பகவத் கீதையின் வாசகம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.