மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது – கர்நாடக அரசு அறிவிப்பு!

The Karnataka government has announced that the late actor Punitha Rajkumar will be given the Karnataka Ratna award.

மறைந்த நடிகர் புனித ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 46 வயதுடைய நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இவரது உடல் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் பெங்களூர் கண்டீரவா ஸ்டுடியோவில் உள்ள அவரது பெற்றோர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்க ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டதாகவும், அவருக்கு தேசிய விருது அளிப்பது குறித்து தனக்கு விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெற்றோர்களான ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பார்வத்தம்மா ஆகியோரின் நினைவிடங்களை போல நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.