திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...! மணமகன் தந்தை உட்பட 4 பேர் பலி...!

About 100 people attending a wedding in Telangana have been diagnosed with corona infection.

தெலுங்கானாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு  ஊரடங்கு நாட்களில் நடைபெறும், திருமண நிகழ்வு, துக்க நிகழ்வு போன்ற நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட யாருமே, சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை.

இதனையடுத்து, விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்ற பின், இது குறித்து சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் திருமணத்தில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

இதனை தொடர்ந்து, மணமகனின் தந்தை உட்பட நான்கு பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். பயத்தின் காரணமாக இவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக கூட யாரும் முன்வராத நிலையில், கிராமத்து பஞ்சாயத்து கூடி இறுதிச்சடங்கு செய்துள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட 100 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.