பள்ளி திறப்பு எப்போது? – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...!

School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the opening of the school will be discussed only after the fears regarding Corona subside

மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும்,கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில்,முதலாவதாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும்,அதன்பின்னர் படிப்படியாக பிற மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்,மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

“12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது.அதன்படி,12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது.எனவே, மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.

மேலும்,கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனால், கொரோனா 3 வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.எனவே,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டல்கள்,மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே,பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.