கடனை திருப்பி கொடுக்காததால் சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி ...!

Prime Saravana Stores in Chennai has been confiscated for not repaying a loan taken from an Indian bank.

இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய இரண்டு கட்டிடங்களுக்கான இடத்திற்காக இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கான நிலுவை தொகையை இந்தியன் வங்கிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து நிலுவை தொகையை செலுத்தவில்லை என்பது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்துள்ளது. அதன் பின்பும் தொடர்ந்து நிலுவை தொகைக்கான கடனை சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர்.

அவகாசம் கொடுத்தும் கடனை திருப்பி கட்டாததால் தற்பொழுது காவல்துறையினரின் உதவியுடன் இந்தியன் வங்கி அதிகாரிகள் சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய கட்டங்களை சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடையிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்த 4 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.