சென்னை:சாலையோரம் சுற்றித்திரிந்த ஒரு நபரின் வாழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தினமும் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல இன்றும் காலையில் சென்னை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக ஒரு முதியவர் சாலையோரம் இருந்த பிளாஸ்டிக், பேப்பர் போன்றவற்றை சேகரித்து அதனை வைத்து வாழ்ந்து வந்துள்ள அந்த நபர் அமைச்சரை பார்த்ததும் வணக்கம் கூறியுள்ளார். அப்போது அந்த நபரை கண்டு நலம் விசாரித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அந்த நபர், தனது பெயர் ராஜா என்றும் தனது சொந்த ஊர் திருச்சி என்றும் , தான் செய்யும் வேலையை பற்றியும் கூறி தனது அரைகுறை வாழ்வை பற்றியும் கூறியுள்ளார். இதனை கேட்டுக்கொண்ட அமைச்சர், உடனடியாக தனது உதவியாளர்களை அழைத்து அவரை தொழிலாளர் குடியிருப்பு வளாகம் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு திருச்சி ராஜாவை குளிக்க வைத்து புதிய ஆடைகள் கொடுத்து பின்னர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் நோய்எதிர்ப்பு சிகிச்சை போன்ற அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவரது வாழ்வாதாரத்திற்கு தேவையாக ஒரு ஒப்பந்த பணி ஒன்றும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த நெகிழ்ச்சி நிகழ்வை அமைச்சர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node