அட்சய திருதியை அன்று மக்கள் நகை வாங்குவதற்கு என்ன காரணம்?

அட்சய திருதியை அன்று மக்கள் நகை வாங்குவதற்கு காரணம் இது தான்.
அட்சய திருதியை இந்து மதத்தினர் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படக் கூடிய ஒரு புனித நாள் ஆகும். தமிழ் மாதமான சித்திரையில், வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த, மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை என்று அனுசரிக்கப்படுகிறது.
அட்சயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், ‘எப்போதும் குறையாதது’ என்று பொருள்படும். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் மக்கள் இந்த நாளை கருதுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.