15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை – ஒருவரைப் பிடித்து தீவிர விசாரணை!

Police are investigating a robbery involving 15 kg of gold and 500 grams of diamonds in Jos Alukkas on the 15th.

வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும்,நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பள்ளிகொண்டாவைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.