சென்னை :கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை.
இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட அனுமதிக்குமாறுதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFAPA) கர்நாடக திரைப்பட வர்த்தக மன்றத்திற்கு (KFCC) எழுதிய கடிதத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”தமிழ் மற்றும் கன்னட திரையுலகங்களுக்கு இடையிலான நல்லுறவை மதித்து, கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ஜூன் 5ல் கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதி அளிக்க வேண்டும்.
படத்தின் வெளியீட்டை நிறுத்துவது அல்லது ஒத்திவைப்பது இணக்கமான உறவை நிரந்தரமாக சேதப்படுத்தும். கமலின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, சமரச உணர்வோடு அணுக வேண்டும். கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை நிறுத்துவதோ தள்ளிப்போடுவதோ இரு மாநில திரைத்துறையினர் இடையிலான ஒற்றுமையை முற்றிலுமாக சீர்குலைக்கும்.
அண்டை மாநிலங்களான நாம், எல்லா வகையிலும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்குகிறோம். ஆகவே தக் லைஃப் படத்தை சுமூகமான முறையில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown node