லண்டன்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சரத் (வெள்ளி), வருண் சிங் (வெண்கலம் ) பதக்கம் வென்றுள்ளனர்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் லண்டனில் நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதல் (எப்-42) போட்டியில் இந்தியா சார்பில் சரத் குமார், வருண் சிங் பங்கேற்றனர். இதில் 1.84 மீ., துாரம் தாண்டிய சரத் வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் 1.77 மீ., துாரம் தாண்டி வெண்கலம் கைப்பற்றினார். அமெரிக்காவின் கிரீவ் சாம் தங்கத்தை தட்டிசென்றார்.
* இதன் மூலம், இம்முறை இந்தியாவுக்கு 5வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சுந்தர் சிங் (ஈட்டி எறிதல், தங்கம்), அமித் குமார் (‘கிளப் த்ரோ’, வெள்ளி), கரம்ஜோதி (வட்டு எறிதல், வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
விடா முயற்சி:
பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத் குமார் கடந்த 2014ல் நடந்த ஆசிய பாரா தடகள போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தார். கடந்த ரியோ (2016) பாராலிம்பிக்கில் 6வது இடமே கிடைத்தது. ஆனால், விடா முயற்சியால் தற்போது உலக தடகளத்தில் பதக்கம் வென்றுள்ளார்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்த வருண் சிங், சீன ஓபன் (2014) தடகள சாம்பியன்ஷிப்பில் இதே ‘டி-42’ பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தொடர்ந்து அசத்திய இவர், கடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது, உலக தடகளத்திலும் வெண்கலம் கைப்பற்றி உள்ளார்.
ரியோ பாராலிம்பிக்கில் இப்பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இம்முறை பங்கேற்கவில்லை.