உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை!

World Badminton Championship - Kidambi Srikanth becomes first Indian to reach final!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப்  பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சக நாட்டு வீரரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.

முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த்,அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை தனது வசப்படுத்தினார்.போட்டியின் இறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு புதிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக ,1983 ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனேவும், 2019 ஆம் ஆண்டு சாய் பிரனீத்தும் உலக பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில்,தற்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஸ்ரீகாந்த் சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.