பெங்களூர் : கடந்த மே 31, 2026 அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைத் தக்கவைத்த மூன்றாவது அணி என்ற மாபெரும் பெருமையை ஆர்சிபி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளது.
Started the season with belief. Ended with back to back titles. 🏆
— Virat Kohli (@imVkohli) June 9, 2026
This team lived every emotion together. The highs, the pressure, the hurdles, and the unwavering support. It feels extra special because… this place is HOME! ❤️ @RCBTweets pic.twitter.com/H02HdsHCX3
இறுதிப்போட்டி முடிந்து சில தினங்கள் ஆன நிலையில், ஆர்சிபி அணியின் இந்த சீசன் பயணத்தை ஒரு அழகான வீடியோவாகப் பகிர்ந்து விராட் கோலி தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"நம்பிக்கையோடு இந்த சீசனைத் தொடங்கினோம். இப்போது அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளுடன் இதை முடித்திருக்கிறோம். இந்த அணி எல்லா உணர்ச்சிகளையும் ஒன்றாகக் கடந்து வந்துள்ளது. வெற்றிகள், அழுத்தங்கள், தடைகள் மற்றும் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவு என அனைத்தையும் ஒன்றாகக் கண்டோம். இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.. ஏனென்றால், இந்த இடம் தான் என் வீடு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வாஷிங்டன் சுந்தரின் அதிரடி அரைசதத்தால் (50* ரன்கள்) 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ராசிக் தார் சலாம் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு, விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். வெறும் 25 பந்துகளில் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தைக் கடந்தார்.
மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்)* விளாசி ஆர்சிபி அணியை சாம்பியன் ஆக்கினார். இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக 'ஆட்டநாயகன்' (Player of the Match) விருது வென்ற இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் கோலி முறியடித்தார். 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 675 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 4-வது வீரராகப் பட்டையைக் கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
