ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் வெற்றி – வரலாறு படைத்த வங்காளதேசம்!

Bangladesh made history by winning the T20 series against Australia 3-0.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், இதனையடுத்து 4ம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னணியில் இருந்த வங்காளதேசம் அணி, தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று மூன்றாவது போட்டியை எதிர்கொண்டது.

டாக்கா ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, வங்காளதேசம் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு, 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் மகமுதுல்லா மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், ஆடம் சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வங்காளதேச அணியினரின் ஆல் ரவுண்ட் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா திணறியது.

ஆட்டம் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தொடரை இழந்தது. அதிகபட்சமாக ஆஸ்ரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் வங்கதேச சார்பில் இஸ்லாம் 2 விக்கெட், ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வங்காளதேசம் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. முக்கியமான நேரத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த கேப்டன் மகமுதுல்லாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.