டெல்லி :இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் ட்ரீம் 11, பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ஜூலை முதல் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் ட்ரீம் 11, ரூ.358 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை தொடர விருப்பம் இல்லை என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய ‘ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025’ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 20, 2025 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 21, 2025 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, உண்மையான பணம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆன்லைன் கேம்களையும், அவை திறன் அடிப்படையிலானவையாக இருந்தாலும் சரி, தடை செய்ய வழிவகுக்கிறது. இதனால், ட்ரீம் 11 உள்ளிட்ட பேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளங்கள் தங்கள் பணம் சார்ந்த விளையாட்டுகளை நிறுத்தியுள்ளன. இந்த மசோதா, சூதாட்டம், மோசடி, பணமோசடி, மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “நாட்டின் சட்டங்களை பிசிசிஐ முழுமையாக பின்பற்றும். ஆன்லைன் கேமிங் மசோதா அமலுக்கு வந்தால், ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் தொடர முடியாது,” என தெரிவித்தார். இந்த மசோதாவால், ட்ரீம் 11 மட்டுமல்லாமல், மை11சர்க்கிள் உள்ளிட்ட பிற ஆன்லைன் கேமிங் தளங்களும் பாதிக்கப்படலாம், இது இந்திய கிரிக்கெட்டுக்கு ரூ.1000 கோடி வரை நிதி இழப்பை ஏற்படுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த முடிவால், செப்டம்பர் 9, 2025 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்பான்சர் லோகோ இல்லாத ஜெர்சியுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
பிசிசிஐ புதிய ஸ்பான்சர்களை தேடி, டெண்டர் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ட்ரீம் 11-ன் ஒப்பந்தத்தில், அரசு விதிமுறைகள் காரணமாக ஒப்பந்தம் முறியும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற பிரிவு உள்ளதால், நிறுவனம் எவ்வித நஷ்டமும் இன்றி விலக முடியும்.
