"பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம்" – மாநில தலைவர் அண்ணாமலை....!

"We will not rest until the BJP's ideology is taken to every house" - State President Annamalai

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து,தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா நேற்று அறிவித்தார் .மேலும், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்,பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம்  என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“நமது தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

அழகான மாநிலமான நம் தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தமிழ் பற்றும், நமது தமிழ் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம்”,என்று தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.