அதிமுக – தமாகா – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதே முக்கியம். இன்னும் ஓரிரு நாட்களில் யார் போட்டியிடுவார்கள் என அறிவிப்போம். – ஜி.கே.வாசன் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவின் காரணமாக நேற்று, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கட்சி கூட்டணி கட்சி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) வேட்பாளர் யுவராஜா என்பவர் போட்டியிட்டார். அதே போல, தற்போது உள்ள இடைத்தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்பதை பற்றி ஆலோசிக்க இன்று தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து பேசிய ஜி.கே.வாசன், தாமாக அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை புரிந்தார்கள். நான் இரண்டு நாள் முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை இல்லத்தில் சந்தித்து பேசினேன். இந்த தேர்தல் மிக முக்கியமானது. அதிமுக – தமாகா – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதே முக்கியம். இன்னும் ஓரிரு நாட்களில் யார் போட்டியிடுவார்கள் என அறிவிப்போம் எனவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.