மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரு பிரிவினர்கள் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரமானது, நேற்று முன் தினம் வெளியான வீடியோ மூலம் அனைவரது பார்வைக்கும் வந்து நெஞ்சை பதறவைத்துள்ளது. அங்குள்ள நிலவரம் என்ன என அனைவரையும் பதைபதைக்க வைக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் அமைந்துள்ளது.
இந்த கொடூர சம்பவங்கள் நடந்து மாதம் கடந்த பிறகு தற்போது தான் மணிப்பூர் காவல்துறை வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்துள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.
அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும். என தனது கண்டனத்தை பலமாக பதிவு செய்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
unknown node