#Breaking:தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் ...!

Vaccination camp for pregnant women for the first time in Tamil Nadu

தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.பின்னர் மே மாதம் முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல், மாற்றுதிறனாளிகளுக்கு என சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்,தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில்,தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இதனை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 7,38,583 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

மேலும் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில்:

“18 வயதுக்கும் மேற்பட்ட  அனைத்து கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக குறைய தொடங்கி நேற்று  4,230 ஆகவே பதிவாகியுள்ளது.இதனால் நிம்மதி அளிக்கக்கூடிய அளவு தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தாலும்,ஆர்டிபிசிஆர் பரிசோதனையை தமிழக முதல்வர் அவர்கள் குறைக்ககூடாது என்று கூறியுள்ளார்.அந்த வகையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது”,என்று கூறினார்.

மேலும்,தமிழகத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது.ஏனெனில்,42 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வரவேண்டி இருந்தது.ஆனால்,தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதை பார்த்து 5 லட்சம் அளவிற்கு கூடுதலாக மத்திய அரசு தடுப்பூசி வழங்கியது.மேலும்,இந்த மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளது.

எனவே,செய்தியாளர்கள் அச்சத்தை விளைவிக்கக்கூடிய கேள்விகளை கேட்க வேண்டாம்,அச்சமும் கொள்ள தேவையில்லை”,என்று தெரிவித்தார்.