#Breaking:முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார்;108 பேரிடம் விசாரணை...!

Tirupattur police are investigating 108 people in connection with a money laundering complaint against former minister Nilofer Kafeel

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான பணமோசடி புகார்.

108 பேரிடம் திருப்பத்தூர் காவல்துறையினர் விசாரணை.

அதிமுக கட்சி உறுப்பினரும்,முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளருமான,திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர்,ஆன்லைன் மூலமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

அந்த மனுவில் பிரகாசம் கூறியதாவது,

”நான் அ.தி.மு.க.வில் கடந்த 23 வருடங்களாக நிரந்தர உறுப்பினராக உள்ளேன்.நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன்.நிலோபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த போது,அவருக்கு உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன்.நிலோபர் கபில் தேர்தலில் போட்டியிட்ட போது, அவர் தேர்தல் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார்.நான் ரூ.80 லட்சம் கொடுத்தேன்.

அதுமட்டுமல்லாமல்,அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக நிலோபர் கபீல் கூறினார் என்று பல பேர், காசோலை வாயிலாக என்னிடம் பணம் கொடுத்தனர்.மொத்தமாக ரூ.6 கோடி அளவுக்கு பணம் என்னிடம்  கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர்,அந்த பணத்தை உடனே நிலோபர் கபீலின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன்.ஆனால்,பணத்தை கொடுத்தவர்கள் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லையென்று,கொடுத்த பணத்தை  என்னிடம் திருப்பிக் கேட்டு,எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள்.

எனவே, நிலோபர் கபீலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து,”கழகத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாலும்,கழக்கக் கட்டுபாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்,அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால்,டாக்டர் நிலோபர் கபீல்,கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்”,என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பி வைக்குமாறு திருப்பத்துார் எஸ்.பி விஜயகுமாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் மீதான மோசடி புகார் குறித்து,திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில்,108 பேரிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

அதன்படி,தற்போது 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இறுதி அறிக்கை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.