3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

The Chennai High Court has advised that precautionary measures are needed to deal with the 3rd Corona wave

3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதன்மை அமர்வு,பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வழக்காக எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து அதனை விசாரித்தது.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி வாதிட்டனர். அப்போது,இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை,வெண்டிலேட்டர் வசதி,தடுப்பூசி குறித்த சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து,தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி,”மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது”, என்று தெரிவித்தார்.பின்னர்,வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”கொரோனா 3 ஆம் அலை ஏற்படுவதற்கான எந்தவித அறிகுறிகள் இல்லை என்றாலும்,3 வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.எனவே,  அதை சமாளிப்பதற்காக 2-ம் அலையை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்.

மேலும்,ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்றும்,மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”,என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்கள்.