'விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்பட கண்காட்சி – இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

Tamil Nadu in the War of Liberation 'photo exhibition - Chief Minister Stalin to open today ..!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்து அரசு பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்பட கண்காட்சியை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் 75 வது சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இக்கண்காட்சியில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் சிலைகள் இடம் பெறுகின்றன. மேலும், தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், தேசத் தலைவர்களின் வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. இப்புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 7.11.2021 வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினையும்,முதல்வர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நகரும் புகைப்படக் கண்காட்சிப் பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து – மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவியர்கள் பார்வையிட்டு, தேசப்பற்றினையும் வரலாற்றினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.