அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்ய ரூ.66 கோடியில் 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..!

Rs 66 crore 'counting and writing movement' to ensure basic education - Finance Minister

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்ய ரூ.66 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இரண்டு மணி நேரமாக பேசி வருகிறார்.அப்போது பேசிய அமைச்சர்,

“2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அடிப்படை கல்வியறிவு,கணித அறிவை உறுதிசெய்ய ரூ.66.70  கோடியில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ தொடங்கப்படும்.

413 கல்வி ஒன்றியங்களுக்கு 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடி மதிப்பில் வழங்கப்படும்.கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழ்நாட்டை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் கணினி திறனை இளம் வயதிலேயே கற்றுக்கொள்ளும் வகையில்,1784 அரசு நடுநிலை பள்ளிகளில் 114.18 கோடி ,மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும்,865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி,தனித்திறன்,விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்க மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்.

கொரோனா பெருந்தோற்று காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்வதே இந்த அரசின் நோக்கமாக உள்ள நிலையில்,அரசு கல்வித் தொலைக்காட்சி மற்றும் 14 தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒளிபரப்புகளின் வாயிலாக தொடர்கற்றல் அடைவதற்கு முயற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.அதற்காக,பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது”,என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.