அரசியல் முடிவெடுக்க நாளை கூடுகிறது பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம்

Pattali Makkal Katchi to meet tomorrow to make political decisions Executive Committee Meeting As the election approaches

அரசியல் முடிவெடுக்க நாளை பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை  காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவிருக்கிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க இளைஞரணித் தலைவர்  அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்படவிருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.