புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி இல்லை – ரங்கசாமி விளக்கம்

Rangasamy, who will be the Chief Minister, has said that there is no Deputy Chief Minister post in Puducherry.

புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி இல்லை என்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

இதையடுத்து யார் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி முதல்வராக பாஜகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.

இதன்பின் புதுச்சேரி ஆளுநரை சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்திருந்தனர். இறுதியாக புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்து, புதுச்சேரியில் ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரியுள்ளார்.

இந்த நிலையில், துணை முதல்வர் பதவி இல்லை என்றும் அந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனவும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே துணை முதல்வர் பதவியை பாஜக நமச்சிவாயத்துக்கு தரப்படலாம் என கூறப்பட்ட வந்த நிலையில், தற்போது ரங்கசாமி விளக்கமளித்துள்ளார்.