"மேகதாது அணை சட்டப்படி தடுக்கப்படும் "- அமைச்சர் துரைமுருகன்..!

"Megha Dadu Dam will be blocked by law" - Minister Duraimurugan ..!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.

இதற்கு எதிராக கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை அமர்வில் மேல்முறையீடு ஒன்றை செய்து இருந்தனர்.

இதனையடுத்து,மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையில்,எடியூரப்பா அவர்கள் ,சட்டத்திற்கு உட்பட்டு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்,எந்த காரணத்திற்காகவும் திட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனை பாதுகாத்திட மேகதாது மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும்  தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு,அதை தடுப்பதற்கு சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளும்”,என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக,தமிழகத்தில் உள்ள பல லட்சம் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு காவிரி நீரையே நம்பி இருக்கிறார்கள்.எனவே, மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிடுமாறு அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.