கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் அன்பரசன் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக தேர்தல்:
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மொத்தமாக உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை திரும்ப பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் தேர்தல் களத்தில் இறங்க சூடு பிடித்துள்ளது.
இன்றுடன் நிறைவு:
தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல்:
ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் சார்பில் அன்பரசன் தேர்தலில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில், நடைபெற்றுவந்த வழக்கின் முடிவாக, தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில், அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.