அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி காரணமாக இருப்பது குற்றமில்லையா? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றிமுதலமைச்சர் பழனிசாமி அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா? என்றும் மேடைக்கு மேடை, ‘தனி மனித இடைவெளி அவசியம்’, ‘அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்’, ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர் அவ்வாறு மக்கள் கூடக்கூடாது என 144 தடைச்சட்டம் போட்ட முதலமைச்சர், தானே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன் என்றும் சட்டதிட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா? என்றும் தெரிவித்துள்ளார்.
unknown node