அரசு சரியாக செயல்படவில்லை – என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

Government is not functioning properly - NR Congress leader Rangaswamy

காங்கிரஸ் கட்சியால் தங்களது எம்எல்ஏக்களை காப்பாற்ற முடியவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.சட்டப்பேரவையில்  முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் கூறினார்.

இதன் பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும்  தீர்மானம் இன்று படுதோல்வி அடைந்தது. நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஆட்சி செய்த காலங்களில் தனது சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கூறாமல்,மத்திய அரசை பற்றி குறை கூறி தன்னுடைய தீர்மானத்தின் மீது கொண்டு வந்த வாதத்தில் பேசியுள்ளார்.எங்களுடைய கேள்வி புதுச்சேரி மாநில மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை ? எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது ? எத்தனை திட்டங்கள் புதிதாக இந்த அரசால் கொண்டு வரப்பட்டது.இந்த கேள்விகள் எல்லாம் எப்போதும் இருந்து வந்தது.அவர்கள் கொண்டு வந்த,கொடுத்த வாக்குறுதிகளை எதையுமே சரியாக செய்யவில்லை என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு.

இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களினால் ,அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ,அவர்களுடைய அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.இதனால் தான் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.எதிர்க்கட்சியாக நாங்கள் , ஆளுகின்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட பிறகு ,நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தினோம்.எங்கள் கடமை அது.ஆகவே நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது,அது தோல்வி அடைந்தது என்று தெரிவித்துள்ளார்.