#BigBreaking:ஸ்டெர்லைட் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை;ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு

Government has no faith in Sterlite Tamil Nadu government opposes opening of plant

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு   உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை மனு:

இதற்கிடையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது. எனவே இடை காலமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு எதிர்ப்பு:

இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மீறியதால் ஆலை மூடப்பட்டுள்ளது.

எனவே எந்த வகையிலும் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என்று தமிழக அரசு தனது காட்டமான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இந்த வழக்கானது நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.