அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இபிஎஸ் கோரிய மனுவை தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை செய்கிறது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை கேட்டறிந்து, கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்புவதை சுட்டிக்காட்டி, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வழக்கை கடந்த 12ஆம் தேதி முடித்து வைத்தது. இதற்கு 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து தலைமைதேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இந்த ஆலோசனை குழுவில் இடம்பெறுகிறார்கள்.
இதனால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரிய மனுவின் மீதான பரிசீலனையை நாளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அவர்களை அங்கீகரிப்பது குறித்த பல்வேறு ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.