படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது – மத்திய அமைச்சர் அதிரடி..!

டெல்லியில் பெண் கொலை விவகாரத்தில் நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என மத்திய அமைச்சர் கருத்து.

டெல்லியில் பெண் கொலை விவகாரத்தில் நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என மத்திய அமைச்சர் கருத்து.

மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் தன்னுடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே டெல்லியில்  மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஷ்ரத்தா தனது வீட்டாரின் அனைத்து தொடர்பையும் துண்டித்துள்ளார்.

ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன், சமூக வலைதளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருக்கும் முகவரியை கண்டறிந்து அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அஃப்தபிடம் விசாரணை நடத்தினர். அப்போது அஃப்தாப், ஷ்ரத்தாவை  திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் ஆனால் அவர் சம்மதிக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும்,  இதனால் கடந்த மே 18-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த்தாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும், அதன்பின் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் கொண்டு டெல்லி முழுவதும் பல இடங்களில்வீசியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த  மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது. நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தாங்கள் வெளிப்படையாக இருப்பதாக நினைத்து, தங்கள் எதிர்காலத்தின் முடிவுகளை அவர்கள் தன்னிச்சையாகஎடுப்பதால் தான் இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.