கொரோனா தொற்றினால் மக்கள் இறந்துக் கொண்டிருக்கும் போது, பசுக்களை பாதுகாக்க பசு உதவி மையம் அமைக்கும் உத்திரப்பிரதேச அரசு..!

Cow help desk to Protect Cows from Corona Infection - Uttar Pradesh Government Order ..!

கொரோனா தொற்றிலிருந்து பசுக்களை பாதுகாக்க உத்திரப்பிரதேச அரசு,ஒவ்வொரு மாட்டத்திலும் பசு உதவி மையம் அமைக்க  உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.இதனால்,நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிகின்றனர்.

இதனைத்தொடர்ந்து,உத்திரப் பிரதேசத்திலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.இதனையடுத்து,இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையளிக்க முடியாமல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் திணறி வரும் இந்த நிலையில்,உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மாடுகளைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது,மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களைப் பாதுகாக்க உதவி மையங்கள் அமைக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.மேலும்,அனைத்து மாட்டு முகாம்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும்,மாடுகளுக்கு அடிக்கடி வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,முகாம்களில் பசுக்கள் மற்றும் பிற விலங்குகளுக்கான ஆக்சிமீட்டர்கள் மற்றும் வெப்ப ஸ்கேனர்கள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்படவுள்ளன.மேலும்,ஆதரவற்ற பசுக்கள் தங்குவதற்காக  முகாம்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கும் நடவடிக்கையை முதல்வர் யோகி அரசு மேற்கொண்டு வருகிறது.