இதுவரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்றும் தேர்தல் அதிகாரிகளை மத்திய அரசே இதுவரையில் நியமித்து வந்தது. ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து பின்னர் பதவி மூப்பு காரணமாக அவர்களை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு சிபிஐ உயர்மட்ட குழு தலைவரை தேர்வு செய்வது போல , தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ்வரம் ராஜ், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் பொதுநலமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பது அரசின் நிர்வாக பணிகளில் ஒன்று தேர்தல் ஆணையராக சுதந்திரமாக செயல்பட்டவர் சேஷன். அவரை நியமித்தது மத்திய அரசுதான் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று புதிய சட்டம் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளார் என மாநிலங்களவை அலுவல் பட்டியலில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவில், தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநிலங்களவையில் இன்று மத்திய அமைச்சர் தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய உள்ளனர்.
தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்யும் முறையில் மத்திய அரசு தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என்றும், உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்ய உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
