திருப்பூரில் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்,20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

Chief Minister Stalin launches 100 oxygen beds, 20 car ambulance in Tirupur

திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.

இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில்,திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்,கொரோனா நோயாளிகளுக்காக,திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

மேலும்,மாவட்ட நிர்வாகத்தால் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய 30 மருத்துவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில்,அதில், முதற்கட்டமாக 6 மருத்துவர்களுக்கு தற்போது பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் கோவை சென்று,ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.