#Breaking:பாஜகவின் அழுத்தம்;பணிந்த முதல்வர் ரங்கசாமி..!

Chief Minister Rangasamy has agreed to hand over the post of Speaker and 2 Ministers to the BJP in the Puducherry cabinet allotment

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில்,பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. இதன்காரணமாக, அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு காலதாமதமாகி வருகிறது.

இதற்கிடையில்,பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏ ஆக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால்,முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து,23 நாட்களுக்கு பிறகு தற்காலிக சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வானது கடந்த மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.பின்னர்,முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 நாட்கள் இழுபறிக்கு பிறகு பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி,புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமையன்று வரவுள்ளதாகவும்,அப்போது,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:பாஜகவின் அழுத்தம்;பணிந்த முதல்வர் ரங்கசாமி..!