"பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது"-சரத்குமார் பாராட்டு!

All India Samathuva Makkal Katchi Founder Sarath Kumar praised the Chief Minister of Tamil Nadu as a role model for many states

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி,திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு,கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதனையடுத்து,கொரோனா சிகிச்சை பிரிவில் நேரடியாக முதல்வர் சென்று ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உள்ளதாக சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின்செயல்பட்டதை வரவேற்கிறேன்.

மேலும்,கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையானபணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்”,என்று தெரிவித்தார்.

unknown node
"பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது"-சரத்குமார் பாராட்டு!