சென்னையின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் பிரச்னையை சரிசெய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன் பிறகு சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கியது.
கவன ஈர்ப்பு தீர்மானம் :
இதில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அந்தந்த தொகுதி உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு துறைரீதியில் அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர்.
கழிவுநீர் பிரச்சனை :
அதில் சென்னையில் கழிவுநீர் தேங்குவது பற்றி எழுந்த புகார்கள் தொடர்பாக பேசிய நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கழிவு நீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுவதால் அதனை சரி செய்ய உந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை உண்டாகியுள்ளது என குறிப்பிட்டார்.
திட்டப்பணிகள் :
எந்தெந்த இடங்களில் உந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மாதவரம், முகப்பேர், ஓட்டேரி, கொரட்டூர், டி.பி சத்திரம், வடபழனி, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. என்று குறிப்பிட்டார்.
100 கோடி நீதி :
மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் பிரச்னையை சரிசெய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.