டிட்வா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் kkssr ராமச்சந்திரன் பதில்!

புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Ramachandran

சென்னை :வங்கக்கடலில் வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் டிட்வா (Ditwah) புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளதன்படி, புயல் நாளை (நவம்பர் 30) அதிகாலை வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் “புயல் சென்னையைத் தாக்குமா என்பதை வானிலை மையம் தெரிவிக்கவில்லை” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.புயலுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். “திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களாக மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் (SDRF) தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்களை பிற மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் வரவழைக்க உள்ளோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினருக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், நாளை பாதிப்பைப் பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.இதுவரை போக்குவரத்து பாதிப்பு அல்லது உயிரிழப்பு இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். “16 கால்நடைகள் மரணமடைந்துள்ளன, 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. எந்தத் துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா மாவட்டங்களிலும் 6,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

அதே சமயம், மின்சார விநியோகம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற துறைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கையின்படி, புயலால் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழை (100-200 மி.மீ.) பெய்யும். பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கடல் அலை அதிகரிப்பால் ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் தங்கி, ஐஎம்டி சேதங்களைப் பின்பற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.