சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு...விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்பன் சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ayyappan temple

கேரளா :சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளைத் தொடங்கினார். இன்று முதல் டிசம்பர் 27 வரை கோவில் நடை திறந்திருக்கும். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மண்டல காலம், 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு முக்கியமானது.சபரிமலை கோவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது.

மண்டல பூஜை, ஐயப்பனின் பிறந்தநாள் கொண்டாட்டமாகவும், மகர விளக்கு தரிசனத்திற்கான தொடக்கமாகவும் அமைகிறது. இன்று அதிகாலை நடை திறப்புடன், கணபதி ஹோமம், உஷ பூஜை, நிர்மால்ய தரிசனம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிதாங்கூர் தேவச்வம் போர்டு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் விர்ச்சுவல் க்யூ பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.

இந்த சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். அடையாறு, மயிலாப்பூர், தி.நகர் போன்ற பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஐயப்ப பக்தர்கள் கருப்பு அல்லது நீல உடை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். இந்த விரதம், உணவுக் கட்டுப்பாடு, தினசரி பூஜை, பக்தி பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சென்னை பக்தர்கள், பேருந்து, ரயில் மூலம் சபரிமலை செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இந்த மண்டல பூஜை சீசன், ஜனவரி 14 மகர விளக்கு வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.