டெல்லி : சோஷியல் மீடியாவில் வெறும் 'ஜோக்' ஆக ஆரம்பித்து, இன்று இந்தியாவின் தேசிய தலைநகரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP) இயக்கம். ஆன்லைனில் மட்டுமே மீம்ஸ் போட்டுக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், முதல்முறையாக வெளியே வந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நிஜ உலகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
என்ன போராட்டம் என்றால், நீட் (NEET) தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதுதான் இவர்களது முழக்கமாக உள்ளது.
டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த ஆன்லைன் இயக்கத்தின் புரட்சியின் பின்னணியில் இருப்பவர் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவரான அபிஜீத் திப்கே. இவர் இன்று டெல்லியில் நடக்கும் நீட் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதற்காக அதிகாலை அவர் அமெரிக்காவில் இருந்து புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே வந்த அபிஜீத் திப்கே, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தைக் கையில் ஏந்தித் தனது ஆதரவாளர்களுக்குக் காட்டினார். அனைவருக்கும் கல்வி உரிமை மற்றும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்தப் புத்தகம் ஏந்தப்பட்டதாக சிஜேபி (CJP) ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வந்த இளைஞர்கள் பலர் முகத்தில் கரப்பான்பூச்சி மாஸ்க் அணிந்தும், கைகளில் தேசியக் கொடி மற்றும் புத்தகங்களை ஏந்தியும் வந்திருந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக ஆதரவாளர்கள், இது வெறும் "சோஷியல் மீடியா கிம்மிக்" (Social Media Gimmick) என்றும், ஆன்லைன் லைக்குகள் ஓட்டுகளாக மாறாது என்றும் விமர்சிக்கிறார்கள்.
இருப்பினும், சமீபத்தில் வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சோஷியல் மீடியா வழியாக வெடித்த இளைஞர்களின் போராட்டங்கள் ஆட்சிகளையே உலுக்கியதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் அதிகரித்து வரும் கல்விச் சிதைவு மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான இளைஞர்களின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' மாறியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் ஒரு மிகப்பெரிய கேம் சேஞ்சர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
