"தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம்"- ஐஐடி கோவா..!

IIT Goa has prepared a unique question paper for students that you can prepare and answer the questions for the exam yourself.

தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம் என்ற ஒரு வித்தியாசமான வினாத்தாளை மாணவர்களுக்காக ஐஐடி கோவா தயாரித்துள்ளது.தற்போது இந்த வினாத்தாளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால்,பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் பாடத் தேர்வுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,கோவாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) மிகவும் தனித்துவமான தேர்வு முறையை அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது கடந்த வாரம்,ஐஐடி ஆன்லைனில் வெளியிட்டுள்ள ‘அனலாக் சர்க்யூட்ஸ்’ என்ற பாடத்திற்கான இறுதி ஆண்டு வினாத் தாளில், தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம் என்று மாணவர்களிடம் தெரிவித்துள்ளது.

அதன்படி,மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்த வினாத்தாளில் கூறப்பட்டிருப்பதாவது,”கல்லூரி பேராசிரியர்கள் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட பாடக்குறிப்புகளிலிருந்து 60 மதிப்பெண்களுக்கான கேள்விகளை நீங்களே தயாரிக்க வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டது.மேலும்,நீங்கள் தயாரிக்கும் இந்த கேள்விகள்,பாடம் குறித்த உங்கள் புரிதலை பிரதிபலிக்க வேண்டும் என்றும்,இந்த பகுதிக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும்,இரண்டாவது பகுதியின்,40 மதிப்பெண்களுக்கு,நீங்கள் தயாரித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதுகுறித்து,ஐ.ஐ.டி கோவாவின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் ஷரத் சின்ஹா கூறியதாவது,”மாணவர்கள் எந்த அளவுக்கு பாடங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை நாங்கள் காண விரும்புகிறோம்.மேலும்,மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வினாத்தாளை உருவாக்கினோம்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,தற்போது இந்த வினாத்தாளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.