சென்னை:10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.
இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும்,தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில்,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாறாக,10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடம் கற்பிக்கப்படும் எனவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.