அரோகர கோஷத்தில் ஆடிவந்த தேர்..!!மக்கள் வெள்ளத்தில் பவனி வந்த மால்மருகன்..!
முருகனின் படைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதியே வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த விழாவின் 7 ஆம் நாளான நேற்று தைப்பூச விழாவாகும்.இதனை முன்னிட்டு படை வீடுகளில் மக்கள் மற்றும் பக்தர்கள் வெள்ளம் கரையுரண்டு ஓடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடங்களுடன் கோவிலில் குவிந்த நிலையில் பாதை யாத்திரையாகவும் பழனி முருகனை தரிசிக்க படையெடுத்தனர்.
இந்நிலையில் பழனியில் நேற்று மாலை சரியாக 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்ட பிறகு தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை உடன் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தேரை வடம் பிடிக்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் அவருடன் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தை தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரானது நகர்ந்த போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற சரண கோஷமானது விண்ணை பிளந்தது.
இந்நிகழ்வை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராய் பல்லக்கில் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.சரியாக இரவு 8 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார்.
9 ஆம் திருநாளான நாளை காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வீதி உலாவுடன் அன்று இரவு 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பெரிய தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலாவும் நடைபெறுகிறது.திருவிழாவின் கடைசி நாளான வருகின்ற 24 தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் சரியாக இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறுகின்றது.இவைகளுடன் அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கும் நிகழ்வை தொடர்ந்து விழாவானது நிறைவடைகிறது.