கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலை பகுதியில் மின்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்திற்கு அலுவலக பணி காரணமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் ஏராளமான வாகனங்கள் தினமும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பாதையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே கழிவுநீர் செல்ல சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்து கம்பி பெயர்ந்த நிலையில் பாலம் உள்வாங்கியது.
இதனால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வகானத்தில் செல்பவர்கள் உடைந்த பாலத்தின் வழியாக செல்வதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே உடைந்து உள்வாங்கிய நிலையில் உள்ள சிறிய பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.