சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு பெட் கோக் பற்றிய மனு மீது இன்று விசாரணை நடத்தியது. அதில், டெல்லி பல வருடங்களாக மாசுபாடால் போராடி வருகிறது. தேசிய தூய காற்று திட்டத்தினை நீங்கள் டெல்லியிலாவது அமல்படுத்துங்கள். நீங்கள் அமல்படுத்த நிறைய திட்டங்கள் உள்ளன. முதலில் டெல்லியிலேனும் இத்திட்டத்தினை நிறைவேற்றுங்கள் என நீதிபதிகள் கூறினர்.
தேசிய தூய காற்று திட்டத்தின்படி நாடு முழுவதும் 100 நகரங்களில் காற்று மாசுபாட்டை சீர் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெட்ரோலிய பொருட்களில் ஒன்றான பெட் கோக் பயன்படுத்துவது அதிக மாசு ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெட் கோக் இறக்குமதிக்கு தடை விதிப்பது பற்றிய முடிவை ஜூன் 30ந்தேதிக்குள் எடுக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது. அடுத்த விசாரணையை ஜூலைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்