பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதியை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில அரசு தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு ஏரோஸ்டாட்ஸ் எனப்படும் பலூன்கள் மூலம் இன்டர்நெட் மற்றும் போன்கால் வசதிகளை வழங்க திட்டமிட்டிருக்கிறது.
unknown nodeஇதன் முதல் படியாக டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் முதல் முறையாக சோதனை முறையில் ஏரோஸ்டாட்ஸ் பலூன் வெள்ளிக்கிழமை பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் அம்மாநில முதல்வர் திரவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டார்.
மும்பை ஐஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நவீன தொழில்நுட்ப வசதியை உருவாக்கி அளித்துள்ளன. 6 மீட்டர் நீளம் உள்ள இந்த பலூன் ஹைட்ரஜன் வாயு உதவியுடன் பறக்கவிடப்படுகிறது. 14 நாட்கள் பறக்கும் இந்த பலூனில் உள்ள டிரான்சீவர் ஆண்டெனா (transceiver antenna) மூலம் போன்கால் வசதியும் வைஃபை மோடம் (Wi-Fi modem) மூலம் இன்டர்நெட் வசதியும் கிடைக்கும்.
இந்த பலூனின் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பலூன் மூலம் இந்த வசதியை ஏற்படுத்த ரூ.50 லட்சம் செலவாகிறது. இதன் மூலம் 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிடைக்கும் இன்டர்நெட் வேகம் 5 Mbps ஆகும்.
இமயமலைப் பகுதியில் உள்ள 16,870 கிராமங்களில் 680 கிராமங்கள் தொலைத்தொடர்பு வசதியில்லாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.