கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
மதுரை நத்தம் சாலையில் கடந்தாண்டு துவங்கப்பட்டு சுமார் ரூ.215 கோடி செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர், சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்றால், தமிழ்நாட்டின் கலை நகரம் மதுரை. கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது. சங்கம் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் வேறு எங்கு அமையும்.
கலைஞர் நூலகத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் நூலகமும் கலைஞர் பெயரில் திறக்கப்பட்டுள்ளது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிரம்மாண்டமான நூலகத்தை கட்டியுள்ளதில் மகிழ்கிறேன். மருத்துவமனையும், நூலகமும் திமுக அறிவிக்காத தேர்தல் வாக்குறுதிகள். கலைஞர் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடு இந்த நூலகம்.
கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது கருணாநிதியின் திமுக ஆட்சி தான். கல்வி வளர்ச்சியில் தமிழகம் என்று நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. கல்வியில் நாட்டிலேயே முதல் இடத்தை பிடிக்க திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறோம்.
பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் மகத்தான திட்டங்களை உருவாக்கி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களும் போற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் யாரைப் பார்த்தாலும் நல்லா படிங்க என்றுதான் சொல்வேன். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிட்டுவிடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருட முடியாத நிலையான சொத்து என தெரிவித்துள்ளார்.
